பள்ளி இறுதி நாளில் உன்னை நான் கேட்டேன் விடையென்று நீ உதிர்த்துச் சென்ற உன் உதட்டுப் புன்னகை இன்னும் விடை தெரியாமல் என்னுள் புதைந்து கிடைக்கிறது…
என் கேள்விகள் எத்தனைப்பக்கங்களானாலும் உன் பதில் என்னவோ மௌனம் கலந்த ஒரு புன்னகை தான்... அத்தனை கேள்விகளும் உன் ஒரு அங்குல புன்னகை முன் மண்டியிடும் மர்மமென்ன...?
எத்தனையோ முறை நீ கேட்டு விடுவாயோ என்று பக்க பக்கமாக பதில் தயாரித்து வருவேன் அத்தனை முறையும நீ என் பெயரைக் கேட்டால் கூட விடை தெரியாமல் விழிப்பேன்… உன் பார்வை என்னும் காந்த அலையில் என் மூளை நரம்புகள் முடக்கப்படுவது இயற்கை தானே...? கோனார் தமிழ் உரை போல காதலுக்கும் ஒரு வழி காட்டியிருதிருந்தால் அதுவாவது என் காதலுக்கு ஒளி காட்டியாக இருந்திருக்கும்
கவிதை நீ கற்றுத்தந்த பாடம்... உன் மௌனத்தை மொழி பெயர்த்தேன் எல்லோரும் என்னை கவிஞனென்றார்கள்... உண்மையில் நானொரு மொழிபெயர்ப்பாளன் என்பது எனக்கு உனக்கும் மட்டுமே தெரிந்த உண்மை..
ஒரு
திருவிழாவில் மீண்டும் நாம் சந்தித்துக் கொண்டோம் உன் கணவனுடன்… என் மனைவியுடன்…
“யாரம்மா இது..?” உன் மகள்.. அன்று விட்டுச்சென்ற புன்னகை உன் உதட்டை மீண்டும் தொட்டுச்சென்றது.. ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி.. என்றாலும் விடை கிடைத்த திருப்தியுடன் மற்றவர்கள்... விடை தெரியாத வினாவுடன் நான்....
|
|